நீதிபதி பத்மநாபனிடம் முறையிடுவோம்.. சம்பளத்தை பிடித்ததிற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம்
போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடிக்கப்பட்டது.
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடிக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிபதி பத்மநாபனிடம் முறையிட இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இரண்டு வாரம் முன்பு போராட்டம் செய்து வந்தனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒரு வாரமாக தொடர்ந்து நடந்தது.
இதனால் தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். பின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு, பல்வேறு பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட சம்பளத்தில் அனைவருக்கும் பிடித்தம் போக மீதி தொகை மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்ததால் பிடித்தம் செய்யப்பட்டு இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டு இருக்கிறார். இது போக்குவரத்து ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இதற்கு எதிராக நீதிபதி பத்மநாபனிடம் முறையிட இருப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அவரிடம் சொல்லி பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை திரும்ப பெறுவோம் என்றுள்ளனர்.
மேலும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நினைக்கிறோம். அவரின் பதிலை பொறுத்து எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்றுள்ளனர்