பஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக்கால் மக்கள் கடும் கோபம் - அதிருப்தி!
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நா்ளை முதல் ஸ்டிரைக் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அறிவிக்காமல் முன்கூட்டியே ஸ்டிரைக்கைத் தொடங்கியதால் மக்கள் மத்தியில் கடும் கோபமும், அதிருப்தியும் தலை தூக்கியுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் பேருக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாததைக் கண்டித்து தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யுசி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக முடிவு செய்து அறிவித்தனர்.
இந்நிலையில் நாளைமுதல் தொடர் போராட்டம் என்று அறிவித்த தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்களது போரட்டத்தை தொடங்கியுள்ளனர். இது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் , பள்ளிகள் விடுமுறை என தொடர் விடுமுறைகளால் தங்கள் சொந்த ஊருக்கு வந்த மக்களை வதைக்கும் வண்ணம் இந்த போராட்டங்கள் அமைந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வருடத்தின் பிறநாட்களை விட்டுவிட்டு வருடத்தின் கடைசி நாட்களில் போராட்டங்களை நடத்தி வருவதும், பொதுமக்களை சிரமத்திற்க்குள்ளாக்குவதும் இவர்களது வாடிக்கையான செய்யலாக உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒருபக்கம் எதிர்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் அவர்களுக்கு வெற்றி போல் காட்சியளித்தாலும் ஆளும் கட்சியானது, புதிதாக பணிக்கு தேர்வு செய்து இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை வைத்து பொது மக்களுக்கு சிரமங்கள் ஏற்படாவண்ணம் பேருந்துக்களை காலைமுதல் இயக்கி வருகிறது.
மேலும் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் வழக்கம் போல் அனைத்து உள்ளூர் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளை முதல் நிலைமை சிக்கலாகும் என்று தெரிகிறது.