கொளுத்தும் வெயில்... பழுக்கும் உடல்...தகிக்கும் கோடை அனல்... சமாளிக்க முடியல சாமி...!
சென்னை: கோடையின் உச்சம் எனும் கத்திரி வெயில் கடந்த திங்கட் கிமை தொடங்கியதையடுத்து, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் பாரன்ஹட்டில் சதம் அடித்து வருகிறது.
உச்சி வெயில் முத்தமிட்ட உவர்க்கும் உப்பு முத்தக் குமிழ்களை கரைக்க மக்கள் நீர் நிலைகளை நோக்கித் திரண்டு வருகின்றனர்.
மீன்களைப் போல நீச்சல் குளத்திலும், மான்களைப் போல பூங்காக்களிலும் உலவித் திரியும் மக்களுக்கு வெயிலிலிருந்து சற்றே இளைப்பாற இவை வழி கொடுக்கின்றன.
ஸ்ஸ்ஸ்...அப்பாடா என்ன வெயில்...
காண முடியாத வெப்பத்தை தோல் எரிய உணரும் சென்னை, வேலுர், மதுரை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு கத்திரி வெயில் ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஏ.சி. அறையில் பணிபுரிந்து சுகவாசம் கண்டவர்கள் சாலையில் செல்லும் போது ஸ்ஸ்ஸ்..அப்பாடா என்ன வெயில் என்று மனம் சொல்லத் தவறுவதில்லை...
கானல் நீராய் கொப்பளிக்கும் சாலைகள்
கானல் நீரால் சாலைகள் நிரம்ப... வாகன ஓட்டிகளும், வியர்வையால் ஆடைகள் நனைய, ஆதவனை கரித்துக் கொட்டிக்கொண்டே செல்கின்றனர். பறவைகள் கூட இரை தேடலை அந்திக்குப் பிறகு ஒத்தி வைத்து கூடுகளில் குட்டித் தூக்கம் போடலாம்.. ஆனால் கடமையைச் செய்ய மனிதன் காலம் தவற முடியுமா... வெயிலா, குளிரா பார்க்க முடியுமா...
மாலை வெயிலில் மெரீனா அலையில்...
கடல் அலையில் பாதங்கள் நனைக்கத் தூண்டும் வெயிலின் உக்கிரத்தால், பணிகள் ஓய்ந்த பின் மாலையில் மொினாவில் திரளும் மக்கள் கூட்டம் விடும் வெப்ப மூச்சுககாற்று கூட, தணிக்கும் தணலை சற்றே சூடேற்றுகிறது.
தண்ணீரில் முகம் நனைக்கத் துடிக்கும் கைகள்...
வெப்பம் வருடும் முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவ கைகள் துடிக்கின்றன. உச்சி வெயிலில் குச்சி ஐஸாய் உடல் நனைய, தண்ணீரைத் தேடிச் செல்ல வியர்வை சுரப்பிகள் தூண்டுகின்றன.
அக்னியை சமாளிக்க சில டெக்னிக் ...
வாரத்திற்கு ஆண்கள், பெண்கள் 3 முறையும், குழந்தைகள் 2 முறையும் எண்ணெய்த் தேய்த்துக் குளித்தல் நலம்..
இதன் மூலம் உடல் வெப்பம் தணியும். நேரம் செல்லச் செல்ல கண்கள் மிகவும் சோர்வாகி எரிச்சல் கொடுக்கும்...
விளக்கெண்ணெய் விடலாம்
அதனை போக்க இரவில் தூங்கும் முன்பு கண்களில் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டு விடலாம்.
கண்களை சுற்றியும் நன்றாக தடவி விட்டு படுக்கலாம். இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
கோடையின் கொட்டத்தை எதிர்கொள்ள...
வெயில்காலங்களில் நம் அனைவரின் பெரும் பிரச்சனை வியர்வை தான்.. அதனை சமாளிக்க காலையில் வெயில் தொடங்கும் முன்பே குளிக்கலாம் .
எலுமிச்சை சாறை ஊற்றி
குளிக்கும் தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறை ஊற்றி பின்பு குளிக்கலாம் பருத்தி ஆடைகளை தேர்வு செய்து, தளர்வான ஆடைகளை உடுத்தலாம். ஒரு நாள் பயன்படுத்திய ஆடையை துவைக்காமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது
காரம் கம்மி ப்ளீஸ்
வெயில் காலங்களில் காரம் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். சுடசுட வயிறு நிறைய சாப்பிடக் கூடாது.
நிறைய மோர் பழம்
மோர், பழவைகள், தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். கோடையை எதிர்கொள்வோம்...உடல் நலத்தைக் காப்போம்...