சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்.... 2009ல் அப்படி என்ன தப்பாக பேசினார்கள் தெரியுமா?
சென்னை: சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் பத்திரிக்கைகள் வயிற்றை கழுவுவதற்காக இப்படி செய்கிறார்களே அவர்கைளை சும்மா விடலாமா என்று கடந்த 2009ம் ஆண்டு பேசிய சூர்யாவின் சர்ச்சை பேச்சுகள் தற்போது அவருக்கே வினையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு பூனைக்கண் நடிகை புவனேஸ்வரி கொடுத்த பட்டியலின் அடிப்படையில் மிகப்பெரிய விபச்சார நடிகைகள் என்ற பட்டியலை ஒரு தமிழ் நாளிதழ் வெளியிட்டது. இந்தச் செய்திக்கு கண்டனம் தெரிவித்து அந்த நாளிதழ் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும், அந்த பத்திரிகையை கண்டித்து அக்டோபர் 7, 2009ல் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய நடிகர், நடிகைகள் மீடியாவில் வேலை பார்ப்போரையும், அவர்களின் குடும்பத்தினரையும் சகட்டு மேனிக்கு பேசினர்.
சூர்யா சொன்னது இது தான்
‘சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். இவர்களை சும்மா விடக்கூடாது. நடிகர் சங்கம் சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்கிறேன். அந்த குழுவைக்கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும்' என்றார் நடிகர் சூர்யா.
தற்கொலைக்கு தள்ளப்பட்ட நடிகைகள்
அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார், "இந்த செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும் சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்... ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்... அய்யோ... நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது/ இந்தப் பிரச்சினைகள் வராமல் தடுக்க விரைவில் நாங்களே ஒரு புதிய பத்திரிகை துவங்குவோம். இதுதவிர, இம்மாதிரி அவதூறுகளைச் சந்திக்கவென்றே ஒரு வக்கீலை சங்கத்தில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இழவுப் பத்திரிக்கை
கூட்டத்தில் சத்யராஜ் பேசும் போது, "எங்க ஊர்ல அந்த பத்திரிகைக்குப் பேரே இழவுப் பத்திரிகைதான். நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா செய்தி போட்டு வீணா சண்டை மூட்டி விட்டுட்டானுங்க. அது ஒரு மஞ்சப்பத்திரிக்கை அதை கண்டிச்சு தீர்மானம் நிறைவேற்றி வெச்சு அதை அந்தப் பத்திரிக்கைக்கே அனுப்பி வைப்போம் என்றார்.
மிக மோசமாக பேசிய விவேக்
எனக்கு கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்று தொடங்கிய விவேக், ஆபாசத்தின் உச்சகட்டமாக பேசினார். "எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க... இப்ப நான் போடறேன் மேட்டர் என கூறியபடி பத்திரிகையாளர் வீட்டு பெண்கள் பற்றி மிகவும் ஆபாசமாக சிலவற்றை பேசினார். மேலும் அவர் செய்யப்போவதை பார்த்து பத்திரிகையாளர்கள் துடிக்கிறதை பார்த்து ரசிக்கணும்டா டேய் என்றார் விவேக்.
சரிந்த விவேக்
மஞ்சுளா என்பவர் எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு... கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்சமல்ல. எம்ஜிஆர் ,சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு. அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா. இப்ப சொல்றேன்... இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை" என்றார் விவேக். இந்த பேச்சுக்காக ஊடகங்கள் மொத்தமாக விவேக்கை புறக்கணித்தன. அவருக்கும் பிறகு சினிமாவில் சரிவு காலம் தொடங்கி பட வாய்ப்புகள் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.