நிதி உதவிகள் அறிவிப்பு மூலம் பிரச்சனைகளுக்கு வடிகால் தேட முயலும் ஜெ.- விஜயகாந்த் சாடல்
சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாத முதல்வர், இறந்த காவலர்களுக்கு நிதிஉதவி வழங்கி பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார். அதுபோல் மீனவர் பிரச்சினைகளில் அதற்கான நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தாமல், மீனவர்கள் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதிஉதவி என்று அறிவித்து பிரச்சினைக்கு வடிகால் தேட முயல்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பட்டப்பகலில் கொலை செய்வது சர்வசாதாரண நிகழ்வாக அரங்கேறி வருகிறது. நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மணிமாறன் வெட்டப்பட்டுள்ளார். வழக்கறிஞர் தங்கி இருக்கும் சேம்பர் எண். 219-ல் ரத்த வெள்ளத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மட்டும் நான்கு வழக்கறிஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே, முன் விரோதம் காரணமாக பஸ்ஸுக்குள் புகுந்து மக்கள் முன்னிலைலேயே மாரியப்பன், பால சுப்ரமணியன் என அண்ணன் தம்பிகளான இவர்களை வெட்டியுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்து பஸ்ஸில் இருந்து அலறி அடித்து ஓடினர்.
காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு எல்லா வித பாதுகாப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே தமிழகம் முழுவதும் சிலை கடத்தல், கஞ்சா, போதை சாக்லெட் புழக்கம், கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் பயந்து வாழக்கூடிய நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாத முதல்வர், இறந்த காவலர்களுக்கு நிதிஉதவி வழங்கி பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார். அதுபோல் மீனவர் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அதற்கான நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தாமல், மீனவர்கள் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதிஉதவி என்று அறிவித்து பிரச்சினைக்கு வடிகால் தேட முயல்கிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெறும் நிதி வழங்குவது மட்டும் போதாது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இரும்புக் கரம் கொண்டு பிரச்சனைகளை கையாண்டு தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.