மத்திய அமைச்சர் பதவி... அன்புமணி vs ரவீந்தரநாத்... யாருக்கு யோகம்?
சென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதியாக இணையப்போவது அன்புமணியா அல்லது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்தா என டெல்லியில் பெரிய விவாதமே நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது எழுவர் விடுதலை உள்ளிட்ட சில கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் அவர்கள் வழங்கினர்.
கூட்டணி விவகாரம் பற்றியும், தமிழகத்துக்கான மத்திய அமைச்சர் தேவை பற்றியும் அப்போது சில விளக்கங்களை மோடியிடம் எடுத்துக் கூறியிருந்தார் ராமதாஸ்.
முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சென்று திடீரென சந்தித்த எம்எல்ஏ கருணாஸ்!
யாருக்கு யோகம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, ஆகிய இரு கட்சிகளிடையே மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரே கூட்டணியில் இருந்தாலும், பாஜக தலைமையிடம் தனி தனித்தனியாக காய்களை நகர்த்துகின்றன அந்த இரண்டு கட்சிகளும்.
வெறுப்பு
அதிமுகவை கடந்த மூன்றாண்டுகளாக தாங்கிப்பிடித்தும் அதற்குரிய பலன்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்ற கோபம் அக்கட்சியின் தேசியத் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இனியும் அதிமுகவுடன் நெருக்கம் பாராட்ட வேண்டுமா என சிந்திக்கத் தொடங்கியுள்ளது டெல்லி.
செல்வாக்கு
இதனால் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பாமகவையும், தேமுதிகவையும் வைத்து புதிய ரூட்டில் பயணத்தை தொடங்கலாமா என ஆழமாக யோசித்து வருகிறது பாஜக தலைமை. உளவுத்துறை கொடுத்த கணக்குப்படி வட மாவட்டங்களில் பாமக, தேமுதிக, ஆகிய இரண்டு கட்சிகளுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக தெரிந்துகொண்டது.
யாருக்கு யோகம்?
இந்நிலையில், அமைச்சரவையில் அன்புமணிக்கு ஒருஇடம் கொடுத்து அமித்ஷா புதிய செயல் திட்டத்தை தமிழகத்தில் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஓ.பி.எஸ்.அதற்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட்டு மகனுக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.