விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சோதனை ராக்கெட்.. டிசம்பரில் ஏவும் இஸ்ரோ!
சென்னை: இந்தியாவில் முதன்முறையாக மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அதிகாரி பிரசாத் தெரிவித்துள்ளார்.
விண்ணுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி.- மார்க் 3 என்ற அந்த ராக்கெட் அடுத்த மாதம் 2வது வாரத்தில் சோதனை அடிப்படையில் விண்ணில் ஏவப்படுகிறது.
விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்றாலும் இதை சோதனை முறையில் இஸ்ரோ செய்ய உள்ளது. ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 4 டன் அளவுக்கு பொருட்களை ஏற்றி அனுப்ப முடியும். இதற்கான கிரையோஜெனிக் என்ஜினை நெல்லையில் உள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி அமைப்பில் சோதனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து இஸ்ரோ அதிகாரி பிரசாத் கூறுகையில்,
மனிதனை விண்ணுக்கு அனுப்ப வசதியாக சோதனை அடிப்படையில் ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 ராக்கெட்டை டிசம்பர் 15ம் தேதியில் இருந்து 20ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த உள்ளோம். தேதி இன்னும் முடிவாகவில்லை.
இது மாதிரி ராக்கெட் தான். இதில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வர முடியும். ராக்கெட்டில் கப் கேக் போன்ற அறை உள்ளது. அந்த அறை 3 டன் எடையும் 2.7 மீட்டர் உயரமும், 3.1 மீ்ட்டர் சுற்று வட்டமும் கொண்டது. ராக்கெட்டை விண்ணில் ஏவியபிறகு 126 கிமீ உயரத்தில் அந்த அறை தனியாக பிரிந்துவிடும்.
வீரர்கள் யாரும் இல்லாத அந்த அறை பின்னர் பூமிக்கு திரும்பும். அது 3 பாராசூட்கள் மூலம் பத்திரமாக தரையிறங்கும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதனை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. இந்த சோதனை வெற்றி பெற்றால் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெறுவோம் என்றார்.