குமரி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக்.. கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோழிபோர்விளையில் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், கோழிபோர்விளையில் வா்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து பல முறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, இன்று தமிழக வாள் வீச்சு வீரா் டேவிட் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நாகர்கோயிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலக வாயிலை மறித்த அவர்கள், தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.