சம்பள உயர்வு... தொகுதி நிதியில் 45% கமிஷன் வேறு... இனி எம்எல்ஏ காட்டுல மழைதான்!
அதிருப்தியில் அணி தாவ உள்ள எம்எல்ஏ-க்களை தக்க வைத்துக் கொள்ளவே இந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்கள் அணி தாவுவதை தவிர்க்கவே இந்த ஊதியம் உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பிளவுப்பட்ட நிலையில் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டபோது சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களுக்கு பணம், பொருள், அமைச்சர் பதவி, தங்கம் உள்ளிட்டவை வழங்குவதாக ஆசை காண்பிக்கப்பட்டது.
சிறை சென்றனர்
சசிகலாவும், தினகரனும் சிறை சென்றதால் கூவத்தூர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மற்ற அதிமுக அம்மா அணி எம்எல்ஏ-க்கள் பிச்சி பிராண்டினர். மேலும் அவ்வப்போது ரகசிய கூட்டங்களை நடத்தி முதல்வருக்கு பீதியை கிளப்பினர்.
அழைத்து பேச்சு
இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏ-க்களை தலைமை செயலகத்துக்கு வரவழைத்து முதல்வர் சமாதானம் பேசினார். எனினும் புகை அடங்கவில்லை. இந்நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் தினகரன் வெளியே வந்தார். அதுதான் தாமதம். சிறை சென்றபோது ஈ, காக்கா இல்லை. ஆனால் அவர் வருவதால் வருமானமும் கிடைக்கும் என்பதால் அவரை 34 எம்எல்ஏ-க்கள் வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பெரும்பான்மை இழப்பு
இதனால் பெரும்பான்மையை இழந்துவிடுவோம் என்று அன்றாடம் பீதியிலேயே இருந்தார் முதல்வர். இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏ-க்களை குஷிப்படுத்தும் விதமாக எம்எல்ஏ-க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி இன்று அறிவித்தார். இதுமுழுக்க அணி தாவும் எம்எல்ஏ-க்களை தக்கவைத்து கொள்ளும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
45 சதவீத கமிஷன்
தமிழக வறட்சி, விவசாயிகள் பாதிப்பு, தண்ணீர் பிரச்சினை என தமிழகமே அல்லோகலப்படும் நிலையிலும் கடும் நிதி நெருக்கடியிலும் இந்த ஊதிய உயர்வும், தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. தொகுதி நிதியில் 45 சதவீதம் கமிஷன், லஞ்சம், ஊழலுக்கு என்பதால் இந்த எம்எல்ஏக்களுக்கு இனிமேல் குஷி தான்.