தூத்துக்குடி: வைகுண்டராஜனை கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்
நெல்லை: தாது மணல் குவாரிகளை மூடக்கோரியும், வைகுண்டராஜனை கைது செய்ய கோரியும் தூத்துக்குடியில் இன்று மாலை பொது கூட்டம் நடைபெற உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இயற்கையாக கிடைக்கும் கடற்கரை மணலில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. இந்த தாதுக்களை பிரித்தெடுத்து பல தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன.
தூத்துக்குடி கடலோர பகுதியில் அனுமதியை மீறி தாது மணல் எடுப்பதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதனை அடுத்து கலெக்டர் ஆஷிஸ்குமார் குழுக்களை அமைத்து ஆய்வு நடத்தினர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 2.30 லட்சம் டன் மணல் சட்டவிரோதமாக விவி மினரல் நிறுவனம் அள்ளியது தெரிய வந்தது. ஆனால் உடனடியாக கலெக்டர் மாற்றப்பட்டார். இதையடுத்து வருவாய் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்தது. நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக இந்த குழு அக் 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டது. இரண்டாம் கட்டமாக நவ 7, 8 ஆகிய தேதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லையில் 52 குவாரிகளில் 15 குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த குழு நவ 8, 9 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தாது மணலை கொள்ளையடித்த வைகுண்ட ராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடக்கோரியும் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா நகர் மெயின் ரோட்டில் பொது கூட்டம் நடைபெற உள்ளது. மதுரை ஐகோர்ட் வக்கீல் வாஞ்சிநாதன் தலைமை வகிக்கிறார். இந்த பொது கூட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் துண்டு பிரச்சுரம் வினியோக்கப்பட்டு வருகிறது.