டாஸ்மாக் சரக்கில் “புகையிலை துகள்கள்” - பீதியில் “குடி” மன்னர்கள்!
அரக்கோணம்: அரக்கோணம் அருகே டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபான பாட்டிலில் புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபானங்களில் காண்டம், பல்லி, நத்தை, சிறு வகை பூச்சிகள், கண்ணாடிதுகள்கள் உள்ளிட்டவை இருப்பதாகவும், கலப்பட மதுபானம் விற்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர், நேதாஜி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் குவார்ட்டர் வாங்கியுள்ளார்.
அவர் வாங்கிய மதுபானத்தை குடித்தபோது அதில் புகையிலை துகள்கள் போன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். திடீரென வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். இதைக்கண்டு கடையில் மதுவாங்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த செந்தில், அங்கிருந்தவர்களிடம் கூறுகையில், "நான் வாங்கிய மதுபாட்டிலில் புகையிலை போன்ற துகள்கள் இருந்தது. இது ஒரிஜினல் சரக்கா? போலி சரக்கா? என தெரியவில்லை. அதிகாரிகள் இதை ஆய்வுசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.