அன்று சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் கூடியவர்கள்.. இன்று ஜெ.வுக்காக ஏன் கூடலை??
ஜெ.சமாதியில் ஓபிஎஸ் தியானம் செய்தபோது சசிக்கு ஆதரவாக போயஸ் இல்லத்தில் திரண்ட அமைச்சர்கள், நேற்றைய ரெய்டின்போது எட்டிக் கூட பார்க்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியபோது போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்ட அமைச்சர்கள் இன்று ஜெயலலிதாவின் வீட்டிலேயே சோதனை நடைபெற்ற போது அங்கு வராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா முதல்வர் ஆக பதவியேற்பதற்காக அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு ஓபிஎஸ் அனுப்பினார்.
அதன்பின்னர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடியபடி ஓபிஎஸ் தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தான் சசிகலா குடும்பத்தினரால் நிர்பந்தப்படுத்தப்பட்டதாக செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.
போயஸ் கார்டனில் குவிந்த அமைச்சர்கள்
அப்போது சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் குற்றம்சாட்டியதை கண்டித்து அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோரும், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களும் திரண்டனர். சசிகலாவை தூக்கி வைத்து கொண்டாடினர்.
சின்னம்மா இல்லை அம்மா என்ற அழைப்பு
அமைச்சர் சிவி சண்முகம் ஒரு படி மேலேபோய் சின்னம்மா மீது ஓபிஎஸ் களங்கம் ஏற்படுத்துவதா என்று குதித்து விட்டு அவர்கள் எனக்கு சின்னம்மா இல்லை அம்மா என்று மிகவும் உணர்ச்சி பொங்க பேசினார். மற்ற அமைச்சர்கள் யாரும் பேட்டி கொடுக்கவில்லையெனிலும் பெரும்பாலானோர் அங்கு திரண்டனர்.
ஏன் வரவில்லை?
ஆனால் நேற்றிரவு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு ஒரு அமைச்சரோ எம்எல்ஏவோ அங்கு வரவில்லை. ஜெயலலிதா தங்களை வாழ வைத்த தெய்வம் என்றும் இதய தெய்வம் என்றும் வார்த்தைக்கு வார்த்தை துதி பாடிய இவர்கள் நேற்று இரவு போயஸ் தோட்டத்துக்கு வராதது ஏன்.
ஜெ.வுக்கு வராதது ஏன்?
இதுகுறித்து மக்கள் கூறுகையில் அன்று சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் கூடிய கூட்டம் இன்று ஜெயலலிதாவுக்காக வராததற்கு பதவி கிடைத்துவிட்டதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். சசிகலாவுக்கு ஆதரவளித்தால்தான் அன்று பதவி கிடைக்கும்.ஆனால் இன்று இவர்களுக்கு பதவி கிடைத்துவிட்டது. யாருடைய ஆதரவும் இவர்களுக்குத் தேவையில்லை என்பதாலா. இந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு பெயர், பதவி, அந்தஸ்து ஆகியவற்றை கொடுத்து எங்கோ மூலையில் இருந்தவர்களையும் தமிழக மக்கள் அறிய செய்த ஜெயலலிதாவை தற்போதைய ஆட்சியாளர்கள் ஒரு மறந்து விட்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்று மக்கள் கருத்து தெரிவித்தனர்.