இன்று மகாகவி பாரதியாரின் 134வது பிறந்ததினம்: தமிழக அமைச்சர்கள் மரியாதை
சென்னை: மகாகவி பாரதியாரின் 134ஆவது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அமைச்சர்களும், பல்வேறு தரப்பினரும் பாரதியாரின் திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று நமது பள்ளி பருவத்திலேயே சாதி மறுப்பை ஊட்டிய மகா கவிஞனை நினைவு கொள்ள கடமைபட்டிருகிறோம்.
இந்திய சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் இந்திய பத்திரிக்கையின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட ஆங்கிலேயே அரசாங்கம் நாளிதழ்களை தடை செய்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.
வீரம்மிக்க செய்தியாளர்
அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி தேசிய கவியாக அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார்.
சுதந்திரத்திற்கு முன்பே பாடியவர்
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். செய்தியாளர்களாகிய வீரம் மிக்க மகாகவிஞரை அவரது பிறந்தநாளில் நாம் நினைவு கூர்வோம்
அமைச்சர்கள் மரியாதை
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாகவி பாரதியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, பூனாட்சி, அதிமுக எம்பி விஜயகுமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திருவல்லிக்கேணியில் பாரதி
பாரதி பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரதி பக்தர்கள் குழு சார்பாக நிவாரண நிதியும் வழங்கப்பட்டது.