காற்றில் கரைந்தது மெல்லிசை... எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் தகனம்
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சுமார் 1200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
சாந்தோமில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இன்று காலை இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை அஞ்சலிக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாந்தோம் வீட்டில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.
இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பெசண்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. எம்.எஸ்.வியின் இறுதிச் சடங்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த எம்.எஸ்.விக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகளை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.