தமிழக சட்டசபையில் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதா தாக்கல்
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழக சட்டசபை கூடவுள்ளது. இன்றைய கூட்டத்திலேயே ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழக சட்டசபையில் மார்ச் 16-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்படாமலேயே சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டசபை கூட்டி ஆக வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது.
இதனிடையே சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் பதவி காலம் முடிவடைந்து பணி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து சட்டசபை செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சட்டசபை ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இன்று எழுப்பப்படும் விவகாரங்கள் குறித்து திமு எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று ஆலோசனை நடத்தியது.
கூவத்தூர் பேரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் சட்டசபை இன்று கூடுகிறது. கூட்டத் தொடர் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரியை நிர்ணயிப்பது தொடர்பான இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இன்று இந்த மசோதாவை சட்டசபையில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தாக்கல் செய்யவுள்ளார்.