”அன்பே சிறந்த மருந்து அவர்களுக்கு” - இன்று ஆட்டிச விழிப்புணர்வு தினம்!
சென்னை: ஏப்ரல் 2...இன்று ஆட்டிசக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு தினம். உண்மையிலேயே ஆட்டிசம் என்பது ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும்.
ஆட்டிசம் என்பது குழந்தைகளின் மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று.
ஆட்டிசம் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது.
1000ல் ஒரு குழந்தை:
இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 1000ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது. இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத்திறன், சமூகத் திறன், ஒருங்கிணைப்புத்திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கிறது.
வெளிப்படுத்தத் தெரியாது:
இவர்களுக்கு அறிவு சராசரியாக இருக்கும். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழிதெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப்புரிதலை நமக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் தெரியாது.
மரபணு குறைபாடு:
ஆட்டிசம் குறைபாடு குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப்பட்டால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.
ஆட்டிச அறிகுறிகள்:
தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது. ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது. அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது.
வளர்ச்சியில் தாமதம்:
மழலைப் பேச்சு பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு. மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது.
அன்பே சிறந்த மருந்து:
ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. அன்பு ஒன்றே மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும். குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.