அத்தான் ! கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா? இன்று இட்லி தினம்
இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இட்லி குறித்து திரைப்படங்களில் வந்த காமெடி குறித்தும் குஷ்பு இட்லி குறித்தும் மறக்க முடியுமா.
Recommended Video
சென்னை: உலக இட்லி தினம் கொண்டாடப்படும் வேளையில் ஊர்காவலன் படத்தில் வந்த ராதிகா காமெடியையும் குஷ்பு இட்லியையும் தமிழர்களால் மறக்கமுடியுமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
இன்று உலகம் முழுவதும் இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. எத்தனை உணவுகள் இருந்தாலும் இட்லியை அடித்து கொள்ள இதுவரை எந்த டிஷ்ஷும் இல்லை என்றே சொல்லலாம்.
தென்னிந்திய உணவுகளில் காலை சிற்றுண்டிகளில் மிகவும் பிரபலம் இட்லிதான். இது ரவா இட்லி, கோதுமை இட்லி, காஞ்சிபுரம் இட்லி, மல்லிகைப்பூ இட்லி, தட்டு இட்லி, டம்ளர் இட்லி, கின்னம் இட்லி என பலவகைகளில் நம் வீடுகளில் தயார் செய்யப்படுகிறது.
மல்லிகை பூ
இட்லி மல்லிகை பூ போல் மிருதுவாக இருக்க வேண்டும். எனவே இட்லியை மிருதுவாக்க பெண்கள் கவனத்துடன் மாவை அரைக்கும் பணிகளில் ஈடுபடுவர். இட்லிக்கு தொட்டுக் கொள்ள பெஸ்ட் காம்பினேஷன் சாம்பார்தான். எனினும் தற்போது சட்டினி, சர்க்கரை, இட்லி மிளகாய் பொடி ஆகியவற்றை வைத்து பரிமாறப்படுகிறது.
இட்லி உப்புமா
ரவை , சேமியா உப்புமா ஒரு வகை ருசியை கொடுத்தாலும், நேற்று மிஞ்சிய இட்லியை கைகளால் பிசைந்து தாளிப்புகளை போட்டு வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அனைத்தும் வதங்கியதும் இட்லியை போட்டு பிரட்டி சாப்பிட்டால் ருசியோ ருசி.
மல்லிகைப் பூ இட்லி
நீண்ட காலமாக எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது என்றால் அது குஷ்பு ஆவார். அவரது பெயரில் இட்லி மிகவும் பேமஸ். குஷ்பு இட்லி வெள்ளையாக நன்கு உப்பிக் கொண்டு சற்று பெரிதாகவும் இருக்கும். இந்த இட்லியை ருசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு நிகழ்ச்சியில் குஷ்புவுடன் கலந்து கொண்ட சுந்தர் சியிடம் கூட குஷ்பு இட்லியை சாப்பிட்டுள்ளீர்களா என நிகழ்ச்சி நடத்துபவர் கேள்வி கேட்டிருந்தார்.
காமெடியான இட்லி
நிஜத்தில் அனைவருக்கும் பிடித்த இட்லி, சினிமாவிலும் காமெடிக்கு பயன்படுத்தப்பட்டது. ரஜினி, ராதிகா நடிப்பில் வெளியான ஊர்காவலன் படத்தில் ரஜினியிடம் அவரது நண்பர்கள் உனக்கு வரபோகும் மனைவி எப்படியிருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புவர். அதற்கு அவர் சிலவற்றை விவரிப்பார்.
அழும் ரஜினி
ரஜினி கூறியது போல் விடியற்காலையில் எழுந்து அவரது காலை பிடித்து விட்டு தலையில் எண்ணெய் வைத்து குளிக்க வைத்து சாப்பிட உட்கார வைத்திருப்பார் ராதிகா. அப்போது ரஜினியிடம் ஒரு குண்டானில் சுட்ட இட்லியை காண்பித்து அத்தான், அத்தான் கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டு கொண்டாந்திருக்கேன். நீங்கள் சாப்பிடுங்கள் என்பார். அதற்கு ரஜினி அடியே விடியற்காலை 2 மணிக்கு எழுப்பி ஒரு லிட்டர் எண்ணெய் தடவி குளிக்க வைத்து ஒரு குண்டான் இட்லியை சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படி என்று கேட்பார். அந்த காமெடியை இன்று பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது , சலிக்கவும் சலிக்காது.