எங்களுக்கு இன்றுதான் தீபாவளி - பண்ருட்டி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி
ஐசியுவில் இருந்து சிறப்பு வார்டுக்கு முதல்வர் ஜெயலலிதா மாற்றப்பட்டதால் இன்றுதான் தங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்துள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா குணம் அடைந்ததை அடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முகத்தைப் பார்க்காத அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்தே உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், இந்த நாள் அதிமுகவினரின் வாழ்வில் மறக்கமுடியாத நாள் என்று கூறினர்.
மக்களின் பிரார்த்தனையால் முதல்வர் நலம் பெற்றுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறினார். அதேபோல செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், அம்மா குணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டது காதில் தேன் வந்து பாய்ந்தது போல் உள்ளதாக கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, இன்றுதான் எங்களின் தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை எல்லாம். மக்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை. அம்மா இதுவரை ஓய்வு எடுத்ததே இல்லை. இத்தனை நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து விட்டார் விரைவில் மக்கள் பணியாற்றுவார். ஓய்வின்றி மக்களுக்கு பணி செய்வார் என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.