மேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த மகாத்மா காந்தி!
இன்று கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Recommended Video
சென்னை: மதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார் மகாத்மா காந்தி.
பல குழப்பங்கள், சிந்தனைகள் அந்த பொழுது புலரும் நேரத்திலும் அவரை புரட்டி போட்டது. இந்த பயணிகள் ஏன் இப்படி சொல்லுகிறார்கள்? இவர்களுக்கு கைத்தறி ஆடை வாங்க கூட காசில்லையா? தலையில் தொப்பி முதல் கால் வரை இப்படி நாம மட்டும் குஜராத்தி பாரம்பரியபடி துணிகளால் சுற்றிக் கொண்டுள்ளோமே? என்ன செய்வது? இந்த கேள்விகளே அவரை மாறி மாறி துளைத்தெடுத்தது.
மதுரை வந்துவிட்டது. ரயிலிலிருந்து இறங்கினார். கண்ணுக்கெட்டியவரை வரவேற்க வந்த மக்கள் தலைகள்தான். வெற்று உடம்புடன் பெரும்பாலானோர் வேட்டியை சுற்றிக் கொண்டு நின்றனர். அதை ஸ்டேஷனில் திரண்ட கூட்டத்திலும், விண்ணை முட்டும் முழக்கத்திலும் காந்தி கவனிக்க தவறவில்லை. மகாத்மா காந்தி வரவேற்கப்பட்டு மதுரை மேல மாசி வீதியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்க வைப்பட்டார்.
வீதிகளில் திரிந்தவர்களும் வெற்று மார்புடன்தான் இருந்தார்கள்.
இனி இதுதான் என் உடை
"அட கடவுளே... இன்னுமா நான் இவ்வளவு ஆடைகளுடன் உட்கார்ந்து கொண்டு இதனை கவனித்து கொண்டு இருக்க வேண்டும்?" சட்டென எழுந்தார். அனைத்தையும் களைந்தார். தான் உடுத்தியிருந்த குஜராத் பாணி வேஷ்டியினை நான்காக கிழித்து வைத்துக் கொண்டு அதில் ஒன்றை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். ஸ்டேஷனில் வரவேற்ற காந்தியை இப்போது வேறு மாதிரியாக காட்சியளித்தார். காந்தியின் இந்த கோலத்தை பார்க்கவும் கூட்டம் அலைமோதியது. "இனி இதுதான் என் உடை" என்றார்.
உடும்பு பிடி
மதுரை மக்கள் அணிந்திருந்த அதே உடைதான், தற்போது காந்திஜி அணிந்துள்ளார்.... ஆனால் காந்திஜி அணியும்போது அதன் மகத்துவமும் மகோன்னதமும் வேறு மாதிரி மக்களிடம் காட்டி கொடுத்தது. கூடுதல் மதிப்பை கொட்டிக் கொடுத்தது. மேல மாசி வீதியில் தொடங்கிய அவரது இந்த முடிவு லண்டன் உச்சி மாநாடே ஆனாலும் உடும்பு பிடியாக இருந்தது.
யோசித்து செயல்படுவேன்
"நான் ஒரு முடிவை உடனே எடுக்க மாட்டேன். அப்படியே எடுத்தாலும் ரொம்ப யோசித்துதான் எடுப்பேன். கடைசியில் ஒரு முடிவை எடுத்ததுக்கப்புறம் அதை பற்றி வருத்தப்பட மாட்டேன். அப்படி ஒரு முடிவுதான் 1921 செப்டம்பர் 20-ம் தேதி நான் கைத்தறி ஆடையை அணிந்தது" என்று நவஜீவன் பத்திரிகையில் எழுதினார்.
மகாத்மாவுக்கு மரியாதை
உயர்குடியில் பிறந்து, தென்னாப்பிரிக்காவிலே படித்து, உலகமெல்லாம் சுற்றி வந்த காந்தியை மனம் மாற வைத்த அந்த மேலமாசி வீடு இப்போது எப்படி உள்ளது தெரியுமா? காதி விற்பனை கூடமாக... பழமை குன்றாமல் அதே மிடுக்குடன் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இன்றைக்கும் கைத்தறி ஆடைகளின் மீது இந்திய மக்களுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறதென்றால், அது மகாத்மாவுக்கு அளிக்கும் மரியாதைதான்!
(இன்று கைத்தறி தினம்)