சமையல் எரிவாயு நேரடி மானியம் – விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் பெற விண்ணம் செய்வதற்கான காலக் கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
எரிவாயு சிலிண்டர்களுக்கான நேரடி மானியம் பெறுவதற்கு ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை மார்ச் 31 ஆம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்களிடம் நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் பேர் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். இன்னும் 21 லட்சம் பேர் நேரடி மானியத் திட்டத்தில் இணையாத நிலையில் அதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
எனினும் கூடுதலாக அவகாசம் அளிக்கும் வகையில், நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பதிவு செய்யாத நுகர்வோர் சந்தை விலைக்குத் தான் சிலிண்டர்களை வாங்க வேண்டும். ஜூன் 30 தேதிக்குள் பதிவு செய்து விட்டால் அவர்களின் மானியம் சம்மந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் பின்னர் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பையும் தவற விட்டால் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் சந்தை விலைக்கு தான் சிலிண்டர்களை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.