பரபரப்பான சூழ்நிலையில் கூடும் அமைச்சரவைக் கூட்டம்... ஹாட் டாபிக் என்னவாக இருக்கும்? - வீடியோ
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று முதல்வர் எடப்பாடியார் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் மாலை 3 மணிக்குக் கூட உள்ளது.
சென்னை: தலைமை செயலகத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. பரபரப்பான அரசியல் சூழல் இந்த அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்க்கட்சியான திமுகவை எதிர்கொள்வது குறித்து அதிகம் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பொறுப்பேற்று நூறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட உள்ளது. தினகரன் சிறைக்குச் சென்ற பின், ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை இணையாமல், இரு அணி இணைப்பை ஆவலுடன் எதிர்பார்த்த அதிமுக தொண்டர்களின் ஆசையை சிதறடித்தார்கள்.
ஆனால் தினகரன் சிறைக்கு சென்ற பிறகு எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்த அரசியல் சூழலில் அவர் சிறையில் இருந்து வந்ததும் பல காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. தினகரனை ஒதுக்கி வைத்ததில் மாற்றமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் உரத்த குரலில் சொல்கிறார். ஜெயக்குமாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க. தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
மேலும் எடப்பாடியார் அணியில் இருந்து 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு பிரச்சனையை உண்டாக்குமோ என பதற்றமும் நிலவி வருகிறது.
இந்நிலையில், வரும் மே 14ம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் கூட உள்ளது என சபநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்வதைக் குறித்த ஆலோசனை நடத்தப்படலாம் என்கிறார்கள். மேலும் பல்வேறு மானியக் கோரிக்கைகள், துறை ரீதியான முக்கிய அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.