ரம்ஜான் பண்டிகை… தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இஸ்லாமிய மார்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின்போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றுகின்றனர். ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீ்ன் முகம்மது அறிவித்தார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்று ரமலான் கொண்டாடப் படுவதாக ஹாஜிக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலிருந்தே சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
சென்னையில் உற்சாகம்
சென்னையில் தீவுத்திடலில் நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிறப்புத் தொழுகையில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.
கோவையில் சிறப்புத் தொழுகை
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தர் ஜமாத் பள்ளி வாசல், கோட்டைமேடு பெரிய பள்ளிவாசல், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசல் மற்றும் வடகோவை பகுதியில் உள்ள அகேலி சுன்னத் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் இஸ்லாமியர்கள் பெருந்திரளாகக்கூடி தொழுகையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உற்சாகம்
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருச்சியில் சையது முர்துஷா மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொழுகை தனித்தனியே நடைபெற்றது. இதில், ஏராளமானோர் புத்தாடை அணிந்து, தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும், நண்பர்களும், உறவினர்களும் ஒருவரையொருவர் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பெண்களும் சிறுவர்களும்
திருவண்ணாமலை, மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டித்தழுவி, ரமலான் நல்வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் தொழுகை
தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
கன்னியாகுமரியில் ரம்ஜான்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள பாபா காசிம் ஒலியுல்லா பள்ளி வாசலில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றதுடன், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தன
பெருநாள் தின சிறப்பு தொழுகை !
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை சென்னையில் மட்டும் 9 இடங்களில் நடைபெற்றது.ராயப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் கலந்துக்கொண்டு "பெருநாள் தின சிறப்பு உரை"
நிகழ்த்தினார்.இந்த சிறப்பு தொழுகையில் பெருந்திரளாக ஆண்களும்,பெண்களும் கலந்துக்கொண்டனர்.