பெற்றோர்களே மறவாதீர்.. தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
சென்னை: தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரண்டாம் தவணையாக போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர 1,000 நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் நாளை மீண்டும் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.