ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் கள் விற்போம்... நல்லுச்சாமி
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள் என்று சொல்லப்படும் பனம் பாலை மனிதர்கள் பருகுவது அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. மக்களுக்கான இந்த உரிமையை தமிழக அரசு பரித்துள்ளது.
இதை மீட்பதற்காக வரும் ஜன, 21-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க கள் இறக்கி விற்பனை செய்ய தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில், கள் இயக்கத்துடன் இந்திய மக்கள் இயக்கமும் ஈடுபடும்.
2014-ம் ஆண்டு நடக்கும், பொது தேர்தலை முன்னிறுத்தி கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். லோக்சபா தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு கள் பற்றி முழுமையான விபரம் தெரியும் வகையில், எது காமராஜர் ஆட்சி என்ற புத்தகம் வெளியிடப்பட உள்ளது.
ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்புத்தகம் வரும் 4-ம் தேதி முதல் ஏற்காடு தொகுதி முழுவதும் வினியோகிக்கப்படும்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பனைமரங்களையும், அதை நம்பியுள்ள விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில், கள்ளுக்கான தடை நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பு அரசிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.