கள்ளை போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு! தமிழ்நாடு கள் இயக்கம் சவால்
கரூர்: கள் ஒரு போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு கள் இயக்கம் சவால் விடுத்துள்ளது.
தமிழ்நாடு கள் இயக்க அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாரப்பன் தலைமையில் கரூரில் நேற்று நடந்தது.
பின்னர், கள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடிவெடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில், கேரளாவில் மதுவிற்குத்தானே தடை விதிக்கப்பட்டுள்ளது, கள்ளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் நியமிக்கப்பட்ட ஏ.பி.உதயபானு குழு, கள் உற்பத்தியையும், நுகர்வையும் அதிகரிக்க வேண்டும். இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது உற்பத்தியையும், நுகர்வையும் குறைக்க வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் இதை மறைத்து, உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றுள்ளனர். கள் ஒரு போதை பொருள் கிடையாது, அது ஒரு ஊக்க பானம் என்றுதான் உதயபானு குழு பரிந்துரைத்துள்ளது.
கள்ளை போதைப் பொருள் என நிரூபித்தால், ரூ.10 கோடி பரிசு வழங்குகிறோம். இந்த சவாலை ஏற்குமாறு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு நல்லசாமி தெரிவித்தார்.