டாஸ்மாக் மூடப்பட்டதன் எதிரொலி.. உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அமோகம்!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அதிகரித்துள்ளது.
விழுப்புரம்: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர் பேட்டையில் கள் விற்பனை அதிகரித்துள்ளது. பாட்டிலில் அடைத்து சட்டத்திற்கு விரோதமாக கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும்நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை கடந்த 31ஆம் தேதியுடன் மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 8 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
மதுவை தேடி அலையும் குடிமகன்கள்
இதனால் அப்பகுதி குடிமகன்கள் மதுக்கடைகளை தேடி அலைகின்றனர். இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய கள் விற்பனையாளர்கள் அதிகளவு கள்ளை இறக்கி வருகின்றனர்
பாட்டிலில் பனங்கள்ளை அடைத்து..
பனங்கள்ளை பாட்டிலில் அடைத்து ஒரு பாட்டில் 50 ரூபாய் என விற்பனை செய்து வருகின்றனர். கள் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்த நிலையிலும் குடிமகன்களின் தவிப்பை பயன்படுத்தி உளுந்தூர் பேட்டை பகுதியில் கள் விற்பனை செய்யப்படுகிறது.
கள் விற்பனை அமோகம்
கடந்த 3 நாட்களில் மட்டும் உளுந்தூர்பேட்டையில் கள் விற்பனை செய்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டையில் மதுபான பிரியர்கள் கள் குடிக்க அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் கள் விற்பனை அமோகமாக உள்ளது.
போதை மருந்து கலப்பு..
எளவனாசுர்கோட்டை, எடைக்கல் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்குவதாக கூறி அதிகளவில் கள் இறக்கப்படுகிறது. போதையின் வீரியத்தை அதிகரிக்க போதை மருந்துகளை கள்ளில் கலந்து விற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தடுக்க கோரிக்கை
இதனால் கள் குடிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கள்ளை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.