சென்னையில் இப்படியும் ஒரு அவலம்... 'டாய்லெட்டை' தொலைத்துவிட்டு தேடும் மாநகராட்சி!
சென்னை: பொதுக்கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த கழிவறை உபகரணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி, பொதுமக்கள் வசதிக்காக, பொது இடங்களில் இ-டாய்லெட் மற்றும் பயோ-டாய்லெட்டுகளை அமைத்து வருகிறது. டெண்டர் மூலம், தனியார் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
தண்டையார்பேட்டை முல்லை நகர் பகுதியிலும், இதேபோன்று ஒரு டாய்லெட் அமைக்கும் பணி நடந்து வந்தது. சராப்ளாஸ்ட் என்ற தனியார் நிறுவனம் அங்கு டாய்லெட் அமைத்தது. 80 ஆயிரம் மதிப்புள்ள கழிப்பிட உபகரணத்தை வைத்து பொருத்திவிட்டு பிளம்பிங் வேலைக்காக பெண்டிங் வைக்கப்பட்டது.
பிளம்பர் வந்து பார்த்தபோது, கழிவறை உபகரணம் மாயமாகியிருந்தது தெரியவந்தது. அதிரிச்சியடைந்த அந்த தனியார் நிறுவனம், போலீசில் புகார் அளிக்க சென்றபோது, போலீஸ்காரர்கள் சிரித்துவிட்டார்களாம். 'கக்கூச களவாண்டுபோயி என்ன செய்யப்போறாங்க' என்று போலீசார் சிரித்ததாக தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், புகாரை வாங்கவும் போலீசார் மறுத்துவிட்டார்களாம்.
இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள், தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனராம். ஆயினும் இதுவரை கக்கூஸ் குறித்த விவரம் கிடைக்கவில்லை. சராபிளாஸ்ட் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் 12 பகுதிகளில் மொத்தம் 42 கழிவறைகளை அமைத்துள்ளோம். பிற பகுதிகளிலும் கழிவறை உபகரணங்கள் திருடுபோய்விடுமோ என்ற கவலை உள்ளது" என்றார்.
தெருவிளக்கு, சாலை தடுப்பு இரும்பு கம்பி போன்றவற்றை திருடும் சம்பவங்கள் சென்னையில் அதிகம் நடந்துவந்த நிலையில், கக்கூசுக்கும், கன்னம் வைத்த திருடர்களை என்னவென்று சொல்வது. கக்கூஸ் திருடர்களை கட்டுப்படுத்தாவிட்டால், ஊர் நாறிவிடாதா?