சுங்கக் கட்டண வசூல் தொடங்கியது… ரூ. 2000 நோட்டுக்கு சில்லறை இல்லை.. வாகன ஓட்டிகள் அவதி
இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண வசூல் மீண்டும் தொடங்கியுள்ளதால், சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்னர் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதனை பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பணம் இருந்தும் பணத்தை செலவு செய்ய முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இந்தப் பிரச்சனையை தற்காலிகமாக தீர்க்க சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு, சில்லறை தட்டுப்பாடு என வாகன ஓட்டிகளும், சுங்கச் சாவடி ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
2000 ரூபாய்க்கு சில்லறை எங்கே?
500 ரூபாய் நோட்டு இன்னும் சரிவர புழக்கத்திற்கு வராததால் அனைவரிடத்திலும் 2000 ரூபாய் நோட்டுக்களே உள்ளன. 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுக்களையே கொடுத்து வருகின்றனர். இதனால் சில்லறை கொடுக்க முடியாமல் சுங்கச் சாவடி ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
சில்லறையை உடனே கொடுக்க முடியாததால் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாத இறுதி வரை சுங்கக் கட்டணரத்தை தொடர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.
ஸ்வைப்பிங் கருவியும் இல்லை
சுங்கச் சாவடிகளில் 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கொடுக்க முடியவில்லை. டெபிட் மற்றும் கிரெடிக் கார்டுகளையாவது பயன்படுத்தலாம் என்றால் பல சுங்கச் சாவடிகளில் ஸ்வைப்பிங் கருவிகளும் இல்லை. பாயிண்ட் ஆப் சேல் என்று சொல்லக் கூடிய இந்த கருவி இன்று மாலைக்குள் கிடைத்துவிடும் என்றும் சுங்கச் சாவடி ஊழியர்கள் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றனர்.
லாரி ஓட்டுநர்கள் திணறல்
சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் பாதிக்கப்படுவது லாரி ஓட்டுநர்கள்தான். அவர்கள் கையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்திருப்பதில்லை. கையில் சில்லறை நோட்டுக்களும் இல்லை என்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் லாரிகளை இயக்க முடியாத சூழ்நிலை உருவாகும் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சுங்கக் கட்டணம் ரத்தை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.