டிசம்பர் 2 நள்ளிரவு வரை அனைத்து சுங்கச் சாவடிகளிலும்... ஃப்ரீ.. ஃப்ரீ!
சென்னை: பணத் தட்டுப்பாடு காரணமாக வரும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உயர் மதிப்பு ரூபாய்த் தாள்களான 500, 1000 ஐ ஒழித்து கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு நாடு முழுக்க பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் சொல்லொணாத அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அனைத்து இடங்களிலும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் மக்களின் பெரும் எரிச்சல்களில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ரூ 1000, 500 தாள்களை நீட்டி சில்லறை இல்லை என்று கூற, அது சண்டையில் முடிந்தது.
Toll suspension is extended till 2nd December midnight across all National Highways
— Nitin Gadkari (@nitin_gadkari) November 24, 2016
இதைத் தவிர்க்க சுங்கச் சாவடிகளில் சில தினங்களுக்கு கட்டண வசூல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரத்து முடிவை தொடர்ந்து மத்திய அரசு நீட்டித்து வந்தது. இன்றோடு முடிவதாக இருந்த கட்டண வசூல் ரத்து அறிவிப்பை, மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
அதன்படி வரும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு வரை வாகனக் கட்டண வசூல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல பெரிய மால்கள், விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால் மக்களின் சந்தேகமெல்லாம், இதற்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக எந்த வடிவில் வசூலிக்கப் போகிறார்களோ என்பதுதான்.