கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து.. 12 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை.. உறவினர்கள் பெரும் கவலை
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவர்களதுஉறவினர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 12 ஆகஉயர்ந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள மீனாம்பாள் சாலையில் பேக்கரி ஒன்று இயங்கி வந்தது. அந்த பேக்கரியில் கடந்த 15ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் 6 போலீசார் உள்பட 48க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சைப் பலனளிக்காமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்தனர். அதே போன்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த நரேஷ், முத்தமிழ் நகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் நேற்று மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாஉயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொடுங்கையூர் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கடுமையான தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர். இன்னும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உறவினர்களிடையே அதிகரித்துள்ளது.