டோல்கேட் கட்டணம் இன்று முதல் உயர்வு அமல்: ரூ.5 முதல் ரூ.20 வரை விலையுயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரை கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 42 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 20 சுங்கச்சாவடிகளில் (டோல்கேட்) கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 22 சுங்கச்சாவடிகளில் இன்று அமலுக்கு வருகிறது.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 42 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டு தோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்த்துப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 22 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
கோவை கன்னியூர், திருத்தணி பட்டறை பெரும்புதூர், சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம் பரனூர், சேலம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி சாலைப்புதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குனேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி, மதுரை பூதக்குடி, சிவகங்கை லெம்பலாக்குடி, லட்சுமணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் சென்னசமுத்திரம் ஆகிய 22 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
52 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் ஒருமுறை செல்ல கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.55ல் இருந்து ரூ.60 ஆக கட்டணம் உயர்த்தப்படுகிறது. இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு ரூ.90ல் இருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட உள்ளது.
லாரி, ஆம்னிபஸ்களுக்கு ரூ.190ல் இருந்து ரூ.195 ஆகவும் 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205ல் இருந்து ரூ.215 ஆகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.295ல் இருந்து ரூ.305 ஆகவும், பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.360ல் இருந்து ரூ.375 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
டோல்கேட் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்து பராமரிப்பு கட்டணத்தை மட்டும் வசூலிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வரும் நேரத்தில், இந்த கட்டண உயர்வு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.