மக்கள் கண்ணில் 'தக்காளி சட்னி'யை வரவழைக்கும் தக்காளியின் விலை
சென்னை: தமிழகத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலை அடைய வைத்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியதில் இருந்தே வெயில் கோரத் தாண்டவம் ஆடியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வறட்சி ஏற்பட்டது. இதையடுத்துதக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
விளைச்சல் குறைவால் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ. 65க்கு விற்பனையாகிறது. தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
வரத்து குறைவாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் தக்காளியின் தரமும் சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மழை பெய்து வருகின்றபோதிலும் தக்காளி விளைச்சல் அதிகரித்தால் தான் விலை குறையும். அதனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தக்காளியின் விலை குறைய வாய்ப்பு மிகவும் குறைவு என்று கோயம்பேடு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கும், திருப்பூர், சேலத்தில் ரூ.70க்கும் விற்பைனயானது. வெங்காயத்துடன் போட்டி போட்டு பணக்கார குடும்பத்தில் சேர தக்காளியும் துடிப்பதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரில் கடந்த வாரம் தக்காளியின் விலை சென்ச்சுரி அடித்து மக்களின் மனதில் இடியை இறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.