ஒரு கிலோ தக்காளி ரூ.100... விலையை குறைக்க அரசு நடவடிக்கை... அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி
ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு சட்டசபையில் கூறியுள்ளார்.
சென்னை: தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தக்காளியின் விலை கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலையைக் குறைக்க அரசு என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இருந்தபோதும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. மேலும், தக்காளியின் விலையை குறைக்க அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.