தக்காளி விலை குறையத்தொடங்கியது.. கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.70
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை கிலோ ரூ.70 என்ற அளவில் விற்பனையாகிவருகிறது. கடந்த சில தினங்களாக 100 ரூபாயை ஒட்டியே தக்காளி விலை இருந்த நிலையில், இது கணிசமான விலை சரிவு என்பதால் குடும்பஸ்தர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளதாக கோயம்பேடு மொத்த வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம், சில்லரை கடைகளில் தக்காளி விலை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.
படிப்படியாக நாளை அல்லது நாளை மறுதினத்திற்குள் தக்காளி விலை மேலும் சரிவடையும் என்று கொள்முதல் மார்க்கெட் விவகாரங்களில் பழக்கம் உள்ள வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அமைச்சர்கள் ஆலோசனை
தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, சமீபத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருந்தனர்.
மெத்தனம் கூடாது
வெங்காயம் விலை உயர்வு காரணமாக உ.பி. அரசாங்கம் தனது பதவியையே இழந்தது வரலாறு. எனவே காய்கறி விலை விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருக்க கூடாது என்று அந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பதுக்கல் இல்லை
தக்காளி போன்ற காய்கறிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முடியாது. அழுகிவிடும் தன்மை கொண்டவை என்பதால், சிமெண்ட் போல இவற்றை பதுக்கி விலையை ஏற்ற முடியாது.
வரத்து அதிகரிப்பு
தக்காளியை பொறுத்தளவில் ஓரிரு நாட்களே கெடாமல் இருக்க கூடியது. எனவே பதுக்கல் காரர்களுக்கு விலை ஏற்றத்தில் தொடர்பில்லை என்பது நிபுணர்கள் கருத்து. மழையின்மைதான் இப்பிரச்சினைக்கு காரணம். ஆனால், இப்போது பல மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.