தக்காளி கிலோ ரூ. 10க்கு விற்பனை... குப்பையில் கொட்டும் விவசாயிகள்
சென்னை: தக்காளி ஒருகிலோ ரூ.10க்கும், வெங்காயம் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து வருகின்றனர். தர்மபுரி, ஓசூர் உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டி வருகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஓட்டன்சத்திரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, பெரியபாளையம் உள்பட பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வந்து குவிகிறது. இது தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி லாரியாக தக்காளிகள் குவிந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில், இப்போது திடீரென விலை குறைந்து 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்டி பெட்டியாக அதிக அளவில் தக்காளியை வாங்கிச் செல்கின்றனர்.
சென்னையில் காய்கறிகள் விலை
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தக்காளி குவியல் குவியலாக தரையில் வீசப்பட்டுள்ளது. உண்மையிலேயே விவசாயிகளிடம் தக்காளியை கிலோவுக்கு 50 பைசா முதல் 1 ரூபாய்க்குள் தான் மொத்த வியாபாரிகள் வாங்கி விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
விளைச்சல் அதிகரிப்பு
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தேவத்தூர்,16.புதூர், பெரியகோட்டை, கப்பல்பட்டி,அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளி பயிர் செய்துள்ளனர். கடந்த ஆண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால், அதே போல இந்த ஆண்டும் பயிர் செய்தனர்.
விலை வீழ்ச்சி
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து பயிர் செய்தனர். ஆனால் சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்தால் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.80 வரை விற்பனையாகிறது. இந்த விலை, தக்காளி பறிக்க கொடுக்கப்படும் கூலிக்கு கூட வரவில்லை என விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
குப்பையில் கொட்டும் அவலம்
கடந்த ஆண்டு ஒரு பெட்டி அதிகபட்சமாக ரூ.550 வரை விற்பனையானது.ஆனால் இந்த ஆண்டு அதே தக்காளி ஒரு பெட்டி ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கிடைப்பதே அரிதாக உள்ளது என்று கூறும் விவசாயிகள் தர்மபுரி, ஓசூர் உள்பட பல பகுதிகளில் தக்காளியை குப்பையில் கொட்டி வருகின்றனர்.
வெங்காயம் விலை வீழ்ச்சி
இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் மலிந்து 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் லாரிகளில் கொண்டு வரப்படுவதால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
காய்கறிகள் விலை மலிவு
வெண்டைக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், கோஸ் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலை 25 ரூபாய்க்கு மேல் உள்ளது. புதினா, கொத்தமல்லி கட்டு 5 ரூபாய்க்கு கிடைக்கிறது.