இல்லத்தரசிகளை தவிக்கவிட்ட தக்காளி... விளைச்சல் அதிகரிப்பால் விலை குறையும்
நூறு ரூபாய்க்கும் மேல் விற்கும் ஒரு கிலோ தக்காளி, வரும் வாரங்களில் விலை குறையும் என்று மார்க்கெட் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழக முழுக்க விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி விளைச்சல் அதிகம்.
சென்னை: தக்காளி விலை வரும் வாரங்களில் குறைய வாய்ப்புள்ளதாக கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக விலை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி விளைச்சல் நன்றாக இருப்பதால் மார்கெட்டுகளுக்கு வரத்து அதிகரிக்கும். இதனால் தக்காளி விலை பெருமளவு குறையும் என்று தெரிகிறது.
வறட்சி மற்றும் வரத்துக் குறைவு காரணமாக தொடர்ந்து உயர்ந்து வந்த தக்காளியின் விலை கடந்த வாரங்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. இந்நிலையில் இந்த வாரம் தக்காளி ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தக்காளியின் தகிடுதத்த விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு கண்ணீரை வரவைத்தது. சாம்பார், ரசம் என்று எல்லாவற்றிலும் தக்காளி குறைந்து போனது. தக்காளி சட்னி சாப்பிட்டவர் பணக்காரர் என்று மீம்ஸுகளும் பறந்தன.
இந்த நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி கொண்டு வரப்பட்டதால் தக்காளி விலை, தமிழக மார்க்கெட்டுகளில் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில், தமிழகத்தில் உற்பத்தியாகும் தக்காளிகள் வரத் தொடங்கும் என்பதால், மேலும் விலை, தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வீழ்ச்சி அடையும் காய்கறிகளின் விலை வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆடி மாதத்தில் அதிக அளவில் பண்டிகைகள் மற்றும் வழிபாடுகள் நடப்பதாலும் காய்கறி வரத்து இல்லாமலும் விலை உயர்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.