போடா தக்காளின்னு சொன்னா பெருமைப்படலாம்...ஏன்னா தக்காளி விலை கிலோ ரூ.100!
வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கிடு கிடு உயர்வு கண்டுள்ளது.
சென்னை : தொடர்ந்து தக்காளியின் வரத்தும் விளைச்சலும் குறைந்துகொண்டே இருப்பதால், தக்காளியின் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளது.
உரிக்காமலே கண்ணீர் வர வைத்த சின்ன வெங்காய விலையை அடுத்து எளிமையான சமையல் வகையான ரசத்தை வைக்கலாமா வேண்டாமா என்பது போல தக்காளியின் விலை கிடு கிடு உயர்வு கண்டுள்ளது.
கடந்த மாதத்தில் ரூ. 40க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்து இன்று கிலோ ரூ.100ஐ தொட்டுவிட்டது. இதனால் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் தக்காளியை பார்த்து மட்டுமே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளர் இல்லத்தரசிகள்.
வரத்து குறைவு
விலையேற்றம் குறித்து கோயம்பேடு தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன் கூறும் போது, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி எடுத்து வரப்படுகிறது. உற்பத்தி குறைவால் தக்காளி வரத்து சந்தைக்கு குறைந்துள்ளது.
கிராக்கி
வழக்கமாக 80 லாரி தக்காளி சென்னைக்கு வரும் நிலையில், 40 லாரிகள் மட்டுமே வருகின்றன. அதிலும் இங்கிருந்து வடமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் தட்டுப்பாட்டிற்கு ஏற்ப போக்குவரத்து செலவு உள்ளிட்டவை கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சில்லறை விலையில் சதம்
மொத்த விலையில் தக்காளியின் விலை முதல் ரகம் ரூ.90க்கும் இரண்டாம் ரகம் ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் இதன் விலை ரூ.100 என விற்கப்படுகிறது.
குறைந்த சின்ன வெங்காய விலை
கடந்த வாரம் விலை அதிகமாக விற்கப்பட்ட கொத்தமல்லி சற்று விலை குறைந்துள்ளது. சின்னவெங்காயம் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ. 160 வரை விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ. 100 முதல் ரூ.90 வரை குறைந்துள்ளது. பீன்ஸ்: ரூ.30 முதல் ரூ.60, கேரட்: ரூ. 40- ரூ.60, வெண்டைக்காய்: ரூ.15-ரூ.25, முட்டைகோஸ்: ரூ.10, நூக்கல்: ரூ.25- ரூ.35, அவரைக்காய்: ரூ.24 முதல் ரூ.40 வரையும் விற்கப்படுகிறது.