தூத்துக்குடி மக்களை சந்திக்க தமிழகம் வருகை தரும் மேதா பட்கர்
மேதா பட்கர் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களைச் சந்திக்க நாளை தூத்துக்குடி வருகை
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களைச் சந்திக்க சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் நாளை தூத்துக்குடி வருகை தருகிறார்.
தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடி வந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தின் 100 வது நாளில் பொதுமக்கள் 20 ஆயிரம் பேர் ஜூன் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது திடீரென ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மக்கள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய இத்தகைய இரக்கமற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களை சந்திக்க சமூக உரிமைப் போராளி மேதா பட்கர் நாளை தூத்துக்குடி வர உள்ளார்.
நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக, அணையால் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டி போராடியவர் சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் . இவரது 'நர்மதா பச்சாவோ அந்தோலன்' அமைப்பின் போராட்டம் மூலம் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டவர். இவர் தொடர்ந்து நாடு முழுவதும் எழும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தற்போது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், போராடுபவர்களின் மீது அரசின் அடக்குமுறைகளைக் கண்டிக்கவும் மக்களைச் சந்திக்கவும் நாளை தூத்துக்குடி வருகிறார். இதனை, மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தூத்துக்குடிக்கு மேதா பட்கரின் வருகை குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரரும் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவருமான சுப.உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.