தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை... தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான், நாளை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதிநாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப அந்நாடுகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதே போல், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு மாதத்தின் கடைசி நாளான செவ்வாய்க் கிழமை இருக்கும் என்றும், நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று பிறை தெரிந்ததால், நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி முறைப்படி அறிவித்துள்ளார். தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டதாக அவர் கூறினார். இதேபோல் புதுச்சேரியிலும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நாளை ரமலான் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. பள்ளிவாசல்களில் வண்ண, வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.