நாளை விநாயகர் சதுர்த்தி.. கன்னியாகுமரியில் 4 ஆயிரம் சிலைகள் வைக்க இந்து முன்னணி முடிவு
கன்னியாகுமரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 ஆயிரம் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தச் சிலைகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 ஆயிரம் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தச் சிலைகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன என்கிறார்கள் இந்து முன்னணியினர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளைக் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்து முன்னணி, பாஜக , சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா, இந்துமகா சபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இதற்காகத் தாமரை விநாயகர், அன்னப்பறவை விநாயகர், மூஷிக விநாயகர் என பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2 அடி முதல் 6 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கி உள்ளன.
4 ஆயிரம் சிலைகள்
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, சுமார் 4 ஆயிரம் சிலைகள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்கள் எனப் பூஜைக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவுக்குள் அனைத்து இடங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு, 25ம் தேதி முதல் பூஜைகள் தொடங்கும்.
10 இடங்கள்
ஒரு வாரக் கால பூஜைக்குப் பின் செப்டம்பர் 1ம் தேதி முதல் நீர்நிலைகளில் கரைக்கப்படும். குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை, சின்னவிளை, தேங்காப்பட்டணம், மிடாலம், சங்குதுறை, வெட்டுமடை கடலிலும், பள்ளி கொண்டான் அணை, திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
போலீஸ் விதிமுறை
விநாயகர் சிலைகள் பூஜை மற்றும் ஊர்வலத்துக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வைத்த இடங்களில் தான் சிலைகள் வைக்க வேண்டும்.
20 பேர் கொண்ட குழு
அனுமதியில்லாமல் சிலைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகள் பாதுகாப்புக்கு 20 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும். 24 மணி நேரமும் அந்த பாதுகாப்பு கமிட்டியில் இருந்து குறைந்தபட்சம் 5 பேராவது சிலை உள்ள இடத்தில் இருக்க வேண்டும்.
தீவிர கண்காணிப்பு
ஓலை செட் அமைக்கக் கூடாது. களிமண்ணால் ஆன சிலைகள் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடம் வழியாகவே ஊர்வலங்கள் செல்ல வேண்டும் என்பன போன்ற பல்வேறு உத்தரவுகள், காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.