தூத்துக்குடி கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய மீன்கள்.. காரணம் ஸ்பிக் ஆலையா?
தூத்துக்குடி கோவளம் கடற்கரையில் மீன்கள் இறந்து ஒதுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையில் ஆயிரகணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலை கழிவுகளால்தான் மீன்கள் இறக்கின்றனவா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில், கடலில் நடைபெறும் சில மாற்றங்கள் காரணமாக, மீன்கள் கரை ஒதுங்குவது அல்லது செத்து கரை ஒதுங்குவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடற்கரையோரங்களில் ஸ்பிக் உரத் தொழிற்சாலை உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் அதன் கழிவுநீர் கடலில் கலப்பதால் மீன்கள் இறப்பதாக மீனவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்,.
இந்த நிலையில் நேற்று காலை கடற்கரைக்கு சென்ற மீனவர்கள், சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு கொண்ட ஏற்றுமதி ரகமான கிளிஞ்சான் மீன்களும், நவரை, வெளா போன்ற ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரையொதுங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்கள் இறந்து கிடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். அத்துடன் இறந்த மீன்களையும், அப்பகுதி கடல்நீரையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியபோது, மீன்கள் தொடர்ந்து இறந்து வரும் பிரச்சினையை தாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், உரிய பரிசோதனைக்கு பின்புதான் தொழிற்சாலை கழிவுகளால் மீன்கள் இறந்ததா? என தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் கோவளம் பகுதி கடல் நீரில் அளவுக்கு அதிகமாக அமோனியா இருப்பதாக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வில் தெளிவுபடுத்தியும் மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தை சரிசர கையாளவில்லை என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன் ஒவ்வொரு முறையும் ஆய்வுக்காக மட்டும் அதிகாரிகள் வந்துசெல்வதாகவும். ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் மீன்கள் மட்டும் செத்து ஒதுங்குவதாக அவர்கள் புகார் கூறினர்.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், கடலுக்குள் கழிவுநீரை அனுப்ப அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களை மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும் என மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.