இன்று மழை பெய்யுங்கிறாங்க, பெய்யாதுகிறாங்க: ஐயோ ஒரே குழப்பமாக இருக்கே
சென்னை: இன்று மழை பெய்யும் என்கிறார்கள், பெய்யாது என்கிறார்கள் எங்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது என்று சென்னை மக்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் ஒரு வழியாகிவிட்டனர். வெள்ளம் வடிந்துள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து அவர்களை கவலை அடைய வைக்கிறது.
இன்று சென்னையில் மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் சில இடங்களில் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பு என்று அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகின்றன.
இதற்கிடையே சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப்பில் வேறு சென்னையில் கனமழை பெய்து நகரமே மூழ்கும் என்று நாஸா கணித்துள்ளது என வதந்தி பரவுகிறது. மேலும் பிபிசி கணிப்பின்படி சென்னையில் கனமழை பெய்யும் என்ற தகவலும் தீயாக பரவியுள்ளது.
தமிழகத்திற்கு இனி பாதிப்பு இல்லை என்று வேறு கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இப்படி பலதரப்பட்ட கணிப்புகள் வெளியாகி மக்களை குழப்பம் அடையச் செய்கின்றது.
ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்கள் இத்தகைய செய்திகள், வதந்திகளால் நொந்து போயுள்ளனர்.