தூத்துக்குடி: ஊருக்குள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு - பெண்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி: டாஸ்மாக் மதுக்கடைகள் நெடுஞ்சாலைகளில் இருந்து ஊருக்குள் படையெடுப்பதால் பெண்கள் கடும் கோபத்திலும், பயத்திலும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படுகின்றன. பல கடைகளை ஊருக்குள் மாற்ற முயற்சி நடக்கிறது. நெடுஞ்சாலைகளையே சாதாரண சாலைகளாக மாற்றி வருகின்றனர்.
ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை மாற்றுவதற்கு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியிருப்பு பகுதியில் மதுக்கடை
தூத்துக்குடி அருகே உள்ளது கழுகுமலை செந்தூர் நகர், செந்தில்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் இப்பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள சாலையருகே தனியார் மருத்துவமனை மற்றும் சிஎஸ்ஐ சர்ச், பிள்ளையார் கோயில் உள்ளது.
டாஸ்மாக் கடை
இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு மதுக்கடை அமைந்தால் இப்பகுதி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தீப்பெட்டி ஆலைகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். வாகன ஓட்டிகளுக்கும் குடிமகன்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் எதிர்ப்பு
இதையடுத்து செந்தூர் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கழுகுமலை காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஷாஜகானிடம் மனு கொடுத்து சென்றனர்.
காவல்நிலையம் முற்றுகை
மனுவை பெற்று கொண்ட அவர் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நெடுஞ்சாலை மதுக்கடைகள் ஊருக்குள் படையெடுப்பதால் இன்னும் பல புதிய குடிமகன்களை இந்த அரசு உருவாக்க போகிறதா என்பது பொதுமக்களின் கேள்வியாகும்.