கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு ஜாதிய முத்திரை குத்தி அவமதிக்கும் சு.சுவாமி!!
சென்னை: சொந்த உழைப்பால் உயர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை எட்டிப் பிடித்திருக்கும் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்டோரை ஜாதி அடையாளத்துக்குள் சுருக்கியுள்ளார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி.
சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) அண்மையில் நியமிக்கப்பட்டார். ஒரு தமிழன் தன்னுடைய உழைப்பால் உலகின் முன்னணி சி.இ.ஓக்கள் வரிசையில் இணைந்திருப்பது தமிழ் சமூகத்துக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று. இந்தியர் என்ற வகையில் நாட்டுக்கே பெருமை.
கூகுள் நிறுவன சி.இ.ஓவாக சுந்தர் பிச்சை பதவி ஏற்ற நிலையில் நிர்வாக அமைப்பில் சில மாறுதல்களை செய்துள்ளார். இதில் டிஸ்பிலே அண்ட் வீடியோ அட்வர்டைசிங் பிரிவின் துணைத் தலைவராக இருந்த நீல் மோகன், அப்பிரிவின் சீனியர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் விளம்பரம் மற்றும் வணிகப் பிரிவின் சீனியர் துணைத் தலைவரான ஸ்ரீதர் ராமசாமியிடம் துறைசார்ந்த அறிக்கைகளை சமர்பிப்பார்.
இந்த செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, "கூகுள் தலைமை பொறுப்புகளில் 3 தமிழ் பிராமணர்கள்" என ஜாதிய முத்திரை குத்தி இருக்கிறார். அவரது இந்த ஜாதி பதிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பதவிக்கு வந்த தமிழர்களை இப்படி ஜாதிய முத்திரை குத்திரை பெரும்பான்மை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க முயற்சிப்பது மிக மோசமான விளைவுகளையே உருவாக்க தூண்டிவிடும் வகையில் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Google CEO Pichai taps @nealmohan, @lockheimer as SVP for ads, Android http://t.co/8KVe2gDO3H 3 in Google Tamil Brahmins
— Subramanian Swamy (@Swamy39) October 12, 2015
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளவர்கள், அப்படியானால் இனி திராவிடர் கழகத்தினர் கூகுளையே பயன்படுத்தமாட்டார்களோ? என்று நக்கலடித்துள்ளனர்.
இதற்கும் சுப்பிரமணியன் சுவாமி, ஓடு எலியே ஓடு என்று கிண்டலடித்து விஷம பிரசாரத்தை தூண்டிவிடுகிறார். சுப்பிரமணியன் சுவாமியின் அகராதியில் தமிழர்கள் என்றால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள்... ஆகையால் அவர்களை இழிவுபடுத்துவதற்காக 'எலி' என்றுதான் எப்போதும் குறிப்பிடுவார்...
ஹார்வார்டு பல்கலைக் கழக பேராசிரியராக இருந்தவன்... நாட்டின் அமைச்சராகத்தான் ஆவேன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்குள் இருக்கும் ஜாதிய உணர்வு அவருக்கு வேண்டுமானால் மகிழ்வானதாக தெரியலாம்..
ஆனால் பெருமைக்குரிய சுந்தர் பிச்சை, நீல் மோகன், ஸ்ரீதர் ராமசாமி ஆகியோரை இந்த ஜாதிய வெறித்தனம் நிச்சயம் இழிவுபடுத்தும் செயலே.