நசுக்கப்படும் கருத்துச் சுதந்திரம்... பத்மபூஷன் விருதை 'ரிடர்ன்' செய்கிறார் விஞ்ஞானி பார்கவா
சென்னை: இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதைக் கண்டித்தும், அறிவியலுக்கு முக்கியத்துவம் தரப்படாததைக் கண்டித்தும் தனக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதைத் திரும்பத் தருவதாக நாட்டின் மூத்த வி்ஞ்ஞானிகளில் ஒருவரான பி.எம். பார்கவா தெரிவித்துள்ளார்.
இவர் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார். நாடு முழுவதும் எழுததாளர்கள், இலக்கியவாதிகள் .தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்திய அகாடமி உள்ளிட்ட விருதுகளைத் திரும்பத் தரும் நிலையில் அந்த பட்டியலில் ஒரு விஞ்ஞானி முதல் முறையாக இணைந்துள்ளார்.
எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு ஆதரவாக விஞ்ஞானிகளிடையே ஆன்லைன் கையெழுத்து இயக்கம் ஒன்று நடந்து வந்தது. அதில் 107 மூத்த விஞ்ஞானிகள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலையில் பார்கவா தனது விருதைத் திரும்பத் தருவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்கவா கூறுகையில், அறிவியலுக்காக நான் 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். இதில் பத்ம விருதுக்கு சிறப்பிடம் உண்டு. ஆனால் தற்போது நாட்டில் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படும் நிலையில் அறிவியல் புறக்கணிக்கப்படும் நிலையில் இந்த விருது தேவையா என்ற எண்ணம் எனக்கு வந்துள்ளது.
எனவே இதைத் திரும்ப அரசிடமே வழங்கி விட முடிவு செய்துள்ளேன். அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தே இந்த முடிவை எடுத்தேன். இது எனது தனிப்பட்ட முடிவாகும்.
இதேபோல இளம் விஞ்ஞானிகளும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார் பார்கவா.
1986ம் ஆண்டு பத்மபூஷன் விருதைப் பெற்றவர் பார்கவா என்பது நினைவிருக்கலாம்.