இந்தியா பூராவும் கடையை மூடுனா இங்கேயும் மூடலாம்.. மது விலக்கு குறித்து குஷ்பு!
சென்னை: இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூடினால் மட்டுமே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சியினரும் மதுவிலக்கு கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளன. தனித்தனியாகவும், கூட்டாகவும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சமீபத்தில் திருச்சி வந்த ராகுல்காந்தி கூட மதுவிற்கு எதிராக பேசியதோடு மது கொள்கை வகுக்கப் படும் என்று கூறினார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் சொல்கிற கட்சி காங்கிரஸ் கிடையாது என்றார்.
ராகுல்காந்தி பதில் சொல்வார்
எதை செய்தாலும் யோசித்து செய்வோம். ராகுல்காந்தி தனி மதுக்கொள்கை வகுக்கப்படும் என சொல்கிறார் என்றால், அந்த திட்டத்துக்கு அவர்தான் பதில் சொல்லணும்.
சாத்தியமில்லையே
பிற அரசியல் கட்சிகளை மாதிரி, பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று சொல்வது சாத்தியமில்லை. அது அவர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.
இளங்கோவன் ஆதரவு
தமிழகத்தில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆதரவு கொடுக்கிறார் என்றால் அவர் ராகுல்காந்தியிடம் பேசியிருப்பார்.
ராகுலின் அனுமதி
இளங்கோவன் டெல்லி சென்றிருந்தார். அப்போது, இதுபோன்ற பிரச்னைக்கு ஆதரவு கொடுக்கலாமா, வேண்டாமா என கேட்டிருப்பார். அதன்பிறகு அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
எல்லோருக்கும் தெரியுமே
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. இது அனைத்து கட்சிகளுக்கும் தெரியும்.
இந்தியா முழுவதும்
இந்திய முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மதுவிலக்கை அமல்படுத்த முடியும். அது முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.