தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டம்.. 3 லட்சம் பெண்கள் விண்ணப்பம்!
ஸ்கூட்டருக்கான மானியம் வழங்கும் திட்டத்திற்கு 3,36,103 பெண்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர்.
சென்னை : ஸ்கூட்டர் வாங்க மகளிருக்கு 50% மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 3,36,103 விண்ணப்பங்கள் வந்து இருக்கின்றன. இதில் இருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.
வேலைக்குச் மகளிர் செல்லும் பயனுறும் வகையில் இரு சக்கர வாகனம் வாங்கிட ரூ.25 ஆயிரம் மானியம் அரசு சார்பில் வழங்கப்படும் என கடந்த 2016 சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான விண்ணப்பம் ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும் என்றும் கடந்த ஜனவரி 22ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கவும், இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறவும் பெண்கள் பெருமளவு வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் குவிந்தனர்.
இந்நிலையில், ஸ்கூட்டருக்கான மானியம் பெற 3,36,103 பெண்கள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இருந்து தகுதியான ஒரு லட்சம் பேரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.