சுற்றுலா பயணிகளுக்கோர் நற்செய்தி... குற்றால அருவிகளில் குதூகல கும்மாளம் போட அனுமதி!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லைமாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்தது. இம்மழையின் காரணமாக 17ஆம் தேதி அதிகாலை முதல் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்து வெள்ளம் உருவாகி சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் குளிக்க போலீசார் தடைவிதித்தனர்.
இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் திரண்டு வந்து குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.
மேலும் சபரிமலையில் ஐயப்பான் கோவில் நடைதிறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்களும் திரண்டுவந்து குளித்து அருவியின் அழகை ரசித்து வருகின்றனர். மேலும் இன்று புரட்டாசி மஹாளய அமாவாசை என்பதால் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.