ஒகேனக்கல் அருவிகளில் “ஒல்லியாய்” கொட்டும் தண்ணீர் – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
ஒகேனக்கல்: காவிரியில் தண்ணீர் குறைந்துள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது.
கோடை விடுமுறை காலத்தில் ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் உள்ளது. இங்கு தினமும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோடை விடுமுறை காலத்தில் ஒகேனக்கல்லுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த கால கட்டத்தில் ஒகேனக்கல் பிசியாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வருவது குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் பல பகுதிகளில் தண்ணீரின்றி பாறைகள் வெட்ட வெளிச்சமாக தெரிகின்றன. ஒகேனக்கல்லில் உள்ள முக்கிய அருவிகளில் மிக குறைந்தளவில் மட்டும் தண்ணீர் கொட்டி வருகிறது. குறிப்பாக குளிக்கும் அருவி மற்றும் சினி பால்சில் சிறிய ஓடைபோல் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் தண்ணீர் வரத்து குறைந்ததால் கோடை விடுமுறை காலத்தில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் மற்றும் சமையல் செய்யும் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.