குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். முன்னதாக இம்மழை கேரளாவில் கடந்த வாரம் தொடங்கியது. இதனால் கடந்த சில தினங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை, புளியரை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு வி்ட்டு பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கியது. இதேபோல் ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர்.